பிரெஞ்சு டென்னிஸ் வீரர் எலியட் பெஞ்செட்ரிட் டென்னிஸ் போட்டி இடைவேளையின்போது, தனக்கு வாழைப்பழம் கொண்டுவந்து கொடுத்த பந்துகளை எடுத்துக்கொடுக்கும் பெண்ணிடம் பழத்தை உரித்து தரக் கூறியதற்கு நடுவர் சாடிய சம்பவத்தின் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டென்னிஸ் தொடரில் பிரெஞ்சு டென்னிஸ் வீரர் எலியட் பெஞ்செட்ரிட் பங்கேற்று விளையாடினார். எலியட் பெஞ்செட்ரிட் டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது ஆட்டத்தின் இடைவேளையில் அவருக்கு பந்து எடுத்து கொடுக்கும் சிறுமி ஒருவர் வாழைப்பழத்தை கொண்டு வந்து தந்தார்.
எலியட் பெஞ்செட்ரி அதை வாங்காமல் உரித்துத் தரும்படி கூறினார். இதை கவனித்த நடுவர் பிளாம்...தோலை நீங்களே உரித்துக் கொள்ளலாமே என சாடியுள்ளார். இதையடுத்து, பெஞ்செட்ரிட் அந்த பழத்தை வாங்கி தானே தோலை உரித்துக் கொள்கிறார். இந்த வீடியோ காட்சி டென்னிஸ் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி உள்ளது.
இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் ஒரு விளையாட்டு வீரர் சாப்பிடுகிற வாழைப்பழத்தின் தோலைக்கூட உரித்து தரக் கூறுகிறார் என்றால் எப்படி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு, அவரைக் கேள்வி கேட்ட நடுவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
டென்னிஸ் போட்டிகளில் பந்து எடுத்துக்கொடுக்கும் பெண்கள் பந்து எடுத்துக்கொடுப்பதோடு அவர்கள் வேலை அமைய வேண்டும். அதைவிட்டுவிட்டு டென்னிஸ் வீரர்களுக்கு டவல் எடுத்துக் கொடுப்பது போன்ற வேளைகளில் எல்லாம் அவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சிலர் கூறிவருகின்றனர்.