வட உள் தமிழ்நாடு முதல் டெல்டா மாவட்டங்கள் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறி உள்ளார். சமூக வலைதளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
மேலடுக்கு சுழற்சி (UAC) அமைந்துள்ள இடத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பெங்களூரு-கிருஷ்ணகிரி-திருச்சி-டெல்டா பகுதிகள் வழியாக நகர்வு காணப்படுகிறது. எனவே, இன்றிரவு தமிழகத்தில் டெல்டா பகுதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று நடைபெறும் ஆர்.சி.பி. போட்டி மழை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இருப்பினும், எத்தனை ஓவர்கள் பாதிக்கப்படும் என்பது கணிக்க முடியாது, அந்த மைதானத்தில் உலகத்திலேயே சிறந்த வடிகால் வசதி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
10 அணிகள் பங்கேற்றஇந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வந்தது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. போர்ப்பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டி வருகிற சனிக்கிழமை (மே.17) முதல் மீண்டும் தொடங்கி நடைபெறும் என அறிவித்துள்ளது. அன்றைய தினம் இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று ஆட்டம் நடைபெறும் 7.30 மணியளவில் பெங்களூருவில் மழை பெய்யலாம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறி உள்ளார். மழை பெய்யும் பட்சத்தில் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். இது ஆர்.சி.பி அணி பிளேஆஃப்க்கு முன்னேறுவதில் பெரும் சுணக்கத்தை ஏற்படுத்தும்