இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆனால், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்தார்.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்ய, ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்சை விட சற்று போராடிய ஆஸ்திரேலிய அணி, 261 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் 6, இரண்டாம் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் என மொத்தம் இப்போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மேலும் படிக்க - தோல்விகளை தாங்க முடியலையா? நிறவெறியை கையிலெடுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
இந்நிலையில், இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சை எதிர்கொள்வதில் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். வார்னர், ஸ்மித் இல்லாத அனுபவமற்ற அணியாக இருக்கிறோம் என்று ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "அணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத வெற்றிடத்தை நாங்கள் பெரிதாகவே உணர்கிறோம். இப்போது அனுபவமற்ற அணியாக நாங்கள் இருக்கிறோம்.
இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சை எதிர்கொள்வதில் எங்கள் பேட்ஸ்மேன்கள் தோற்றுவிட்டனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பலரின் பந்துவீச்சை இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்கொண்டதில்லை. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு குறை சொல்ல முடியாத அளவுக்குத் துல்லியமாக இருந்தது.
மேலும் படிக்க - "இவனுக்கு பேசுறத தவிர ஒன்னும் தெரியாது" - ரிஷப் பண்ட்டின் மரண கலாய்! நொந்து போன ஆஸி., கேப்டன்
ஆடுகளத்தைப் பார்த்தவுடன் இது மோசாக இருக்கிறது என்பதை உணர்ந்தோம். இந்தியாவை இங்கே வரவைத்து, அவர்களுக்கு ஏற்றமாதிரியான பிட்சை தயாரித்துவிட்டோம். அவர்களுக்கு ஏற்ற பிட்சில், நிச்சயம் அவர்கள் தான் வெற்றிப் பெறுவார்கள். முதல் இன்னிங்ஸில் மிகச்சிறப்பாக பேட் செய்து, இரண்டு நாட்களுக்கு எங்களை சோதித்து விட்டனர். அப்போது இருந்தே நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம். அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. இதே தவறை, சிட்னியில் நாம் தொடரக் கூடாது.
இருப்பினும், எனக்கு கிடைத்த தகவலின்படி, சிட்னி டிராக் ஸ்பின்னுக்கு நன்றாக சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இந்த வெற்றிக்கு இந்திய அணி முழுவதும் தகுதியானது" என்றார்.