Tamilnadu CM MK Stalin on Silambam and Kabaddi’ Tamil News: திராவிட மாடலின் குறிக்கோளின் படி அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சிலம்பம், கபடி போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று திங்கள் கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மேலும், 1,130 விளையாட்டு வீரர்களுக்கு காசோலைகள் மற்றும் விருதுகள் வழங்கினார்.

இதன்பிறகு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த 3 மாதத்தில் 3-வது முறையாக நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வந்திருக்கிறேன். இதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று. உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. அடுத்ததாக டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் ஒரு ஸ்போர்ட்ஸ்நாதனாகவே மாறிவிட்டார். தனது துறையை எப்போதும் துடிப்புடன் வைப்பதற்காக செயல்பட்டு வருகிறார். திராவிட மாடலின் குறிக்கோளின் படி அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சிலம்பம், கபடி போட்டிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது என்றார். பிப்ரவரி மாதம் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன என்றும் கூறினார். அரசின் சிறப்பான செயல்பாடுகளால் விளையாட்டு துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.
#LIVE: இளைஞர் நலன் & விளையாட்டுத் துறையின் திட்டங்களைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/pYO9RjPFJ4
— M.K.Stalin (@mkstalin) September 12, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil