sports | cricket | worldcup | cm-mk-stalin: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி, அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். நடக்கிறது. அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை பல்வேறு நாடுகளில் பயணித்து வருகிறது. இந்த உலகக்கோப்பை இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அரங்கில் உலகக்கோப்பைக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜூ, உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, உதவி தலைவர் ஆடம் சேட், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோப்பையை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்த உலகக்கோப்பை இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்காக ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வைக்கப்படுகிறது. அதன் பிறகு பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'உலகக்கோப்பையை இந்தியா வெல்லும்' என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
#INDIA will win! #CWC2023 pic.twitter.com/cbzpM651zl
— M.K.Stalin (@mkstalin) September 16, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.