டிஎன்பிஎல் 2018 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 'டிஎன்பிஎல்' எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஜூலை 11ம் தேதி தொடங்கியது.
இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை, சீச்செம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருக்கிறார்கள். இதே போல் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் என்று பெயரை மாற்றி இருக்கிறது.
ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஜூலை 21) இரவு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.
கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியிடமும், 2-வது ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியிடமும் தோல்வி கண்டது. இதனால், இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி முதலாவது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கோவை கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. 2-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.