ஐ.பி.எல் ஒப்பந்தம் இல்லாமல் இருக்கும் 3 வீரர்கள் குறித்தும், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம்.
Tamil Nadu Premier League (TNPL) 2023: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐ.பி.எல் தொடர் போல் இத்தொடரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது திறனை வெளிப்படுத்தும் தளமாக அறியப்படுகிறது. பல திறமையான வீரர்களுக்கு தேசிய அளவில் புகழ் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது. வருண் சக்கரவர்த்தி, ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி நடராஜன் போன்ற வீரர்கள் டி.என்.பி.எல். தொடரில் ஈர்த்ததன் மூலம் தற்போது ஐபிஎல் தொடர் வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.
Advertisment
மறுபுறம், ஒரு காலத்தில் ஐபிஎல் அணிகளில் இருந்த சில வீரர்கள் இப்போது மீண்டும் 10 அணி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறார்கள். அவ்வகையில், தற்போது ஐ.பி.எல் ஒப்பந்தம் இல்லாமல் இருக்கும் 3 வீரர்கள் குறித்தும், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம்.
சி. ஹரி நிஷாந்த்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணியில் சில ஆண்டுகளாக இடம்பிடித்து இருந்தவர் ஹரி நிஷாந்த். 2022ல் என் ஜெகதீசன் மற்றும் சி ஹரி நிஷாந்த் போன்றவர்களை மினி ஏலத்திற்கு முன்னதாக அவர்கள் விடுவித்தனர். தற்போது தமிழகத்தில் இருந்து சி.எஸ்.கே அணியில் ஒரு வீரர் கூட இல்லை.
Advertisment
Advertisements
இந்த நிலையில், டி.என்.பி.எல் தொடருக்கான சீசெம் மதுரை பாந்தர்ஸ் (SMP) அணியை வழிநடத்தி வரும் ஹரி நிஷாந்த் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் அவருக்கு மீண்டும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு வரலாம்.
ஹரி நிஷாந்த் இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் 88 ரன்கள் எடுத்துள்ளார். எவ்வாறாயினும், மதுரை அணி இதுவரை வெற்றிக் கணக்கை தொடங்காத அணியாக உள்ளது. அதனால், எதிர்வரும் போட்டிகளில் அந்த அணியுடன் ஹரி நிஷாந்த்-க்கும் முன்னேறும் தேவை. அது அவருக்கான கதவை திறக்கும்.
எம் சித்தார்த்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (டிசி) ஆகிய அணிகளில் இடம்பிடித்தவர் எம் சித்தார்த். ஆனால், களத்தில் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் தற்போது லைகா கோவை கிங்ஸ் (LKK) அணியில் விளையாடி வருகிறார். பால்சி திருச்சி அணிக்கு எதிராக வெறும் 13 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சீசன் எண்ணிக்கையை நான்காக உயர்த்தினார். அவரது சராசரி 19.75 சற்று அதிகமாக உள்ளது.
— Star Sports Tamil (@StarSportsTamil) June 21, 2023
கோவை அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் அட்டவணையில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் களமாடி வரும் சித்தார்த் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி கவனம் ஈரத்தால் கொல்கத்தா - டெல்லி அணிகள் அவரை மீண்டும் எடுக்க போட்டி போட்டுகொண்டு வரும்.
பாபா இந்திரஜித்
பாபா இந்திரஜித் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் நிலையான செயல்திறன் கொண்டவர். ஆனால் அது இதுவரை உயர் மட்டங்களில் வாய்ப்புகளாக மாற்றப்படவில்லை. ஐபிஎல் 2022ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 3 ஆட்டங்களில் விளையாடிய அவர் அதிக வெற்றியின்றி 2023 ஏலத்தில் விற்கப்படவில்லை.
தென் மண்டலத்தின் துலீப் டிராபி அணியில் இருந்து இந்திரஜித் வினோதமாக விலக்கப்பட்டார். இது இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை பின்தொடர்பவர்களிடமிருந்து அதிர்ச்சிகரமான எதிர்வினைகளைத் தூண்டியது. அவர்கள் கடுமையான விமர்சனத்தையும் முன் வைத்தனர்.
இந்த நிலையில், நடப்பு டி.என்.பி.எல் தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடி வருகிறார் இந்திரஜித். இதுவரை அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் 50.5 சராசரி மற்றும் 134.67 ஸ்ட்ரைக் ரேட்டில் 101 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் சில நம்பிக்கைக்குரிய செயல்பாடுகள் அவரை மீண்டும் ஐ.பி.எல் அணியில் இடம் பிடிக்க செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.