7வது டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
மறுநாள் சனிக்கிழமை நடந்த எலிமினேட்டர் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால், மதுரை பாந்தர்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது.
இந்த நிலையில், நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றியை ருசிக்கும் அணி கோவை கிங்ஸ் அணியை வருகிற புதன்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். எனவே, இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேசமில்லை.
இதனிடையே தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கியள திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. ஷிவம் சிங் 46 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 76 ரன்களும், பூபதி குமார் 28 பந்துகளில் 41 ரன்களும குவித்தனர். நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 186 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில், ரித்திக் ஈஸ்வரன் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
நெல்லை அணி தரப்பில், அஜித்தேஷ் குருசாமி 44 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 73 ரன்களும், விக்கெட் கீப்பர் ரித்திக் ஈஸ்வரன் 11 பந்துகளில் 6 சிக்சருடன் 39 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கோவை அணியுடன் மோதுகிறது.
குவாலிபையர் 1 மற்றும் 2 என தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த திண்டுக்கல் அணி தொடரில் இருந்து வெளியேறியது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil