தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) T20 கிரிக்கெட் 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் T20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் ஜூலை 11ம் தேதி தொடங்குகிறது.
இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.
இந்நிலையில், 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் ஏற்கனவே 3 வீரர்களை தக்க வைத்து இருக்கின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 18 முதல் 19 வீரர்களை எடுக்கலாம். அவர்களில் 2 பேர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களாகவும், மூன்று பேர் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
வீரர்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவு வீரர்களின் விலை ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3 லட்சம் எனவும், ‘பி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.2½ லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1½ லட்சம் எனவும், ‘சி’ பிரிவு வீரர்களின் விலை ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் வாஷிங்டன் சுந்தரை டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தேர்வு செய்து தக்க வைத்துக்கொண்டது. சர்வதேச வீரரான அவர் ஆல்ரவுண்டர் வரிசையில் முத்திரை பதித்து வருகிறார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சர்வதேச வீரரான விஜய் சங்கரை தேர்வு செய்தது. 26 வயதான அவர் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணியிலும், ஐ.பி.எல்.லிலும் முத்திரை பதித்த தினேஷ் கார்த்திக்கை காரைக்குடி காளை அணி தேர்வு செய்தது. அவர் கடந்த இரண்டு டி.என்.பி.எல். போட்டியிலும் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.