இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் 360 டிகிரியிலும் சிக்சர்களைப் பறக்க விட்டு புயலைக் கிளப்புகிறார் என்றால், அதே போல, டி.என்.பி.எல் தொடரில் புயலாக சுழன்று அடித்த சரத்குமாரை தமிழக சூரியகுமார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடந்து வரும் டி.என்.பி.எல் டி20 தொடர் 2023 சீசனில் லீக் சுற்றில் ஆரம்பத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமை தாங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்து அசத்தியது. இருப்பினும் குவாலிபயர் 1 போட்டியில் திண்டுக்கல் அணி கோவையிடம் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு, ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற நெல்லைக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் திண்டுக்கல் அணி கடைசி பந்து வரை போராடி தோல்வியை சந்தித்து வெளியேறியது.
திண்டுக்கல் அணி தோல்வி அடைந்து வெளியேறினாலும், அந்த அணிக்காக விளையாடிய சரத்குமார் டி.என்.பி.எல் 2023 சீசனின் ஒரு கண்டுபிடிப்பாக கிடைத்துள்ளார். 360 டிகிரி புயலாக சுழன்று அடிக்கிறார் சரத்குமார்.
சரத்குமார் திண்டுக்கல் அணியில் மிடில் ஆர்டரில் 7-வது இடத்தில் திருச்சிக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 1 பவுண்டரியுடன் 5 (5) ரன்கள் எடுத்தார். சேப்பாக்கத்துக்கு எதிரான 2வது போட்டியில் 3 பவுண்டரியுடன் 25 (21) ரன்கள் எடுத்தார். அதே போல, கோவைக்கு எதிரான மற்றொரு போட்டியில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 36 (15) ரன்கள் எடுத்தார். அதன் பிறகு, அவர் அடுத்த சில போட்டிகளில் வாய்ப்பு பெறவில்லை.
இருப்பினும், மீண்டும் கோவைக்கு எதிரான குவாலிபயர் 1 போட்டியில் 194 ரன்களை துரத்தும் போது 8வது இடத்தில் களமிறங்கி சரத்குமார் சரவெடியாக அடித்து துவம்சம் செய்தார். சரத்குமார் 1 பவுண்டரி 8 சிக்ஸருடன் 62 (26) ரன்களை விளாசினார். இதன் மூலம் சரத்குமாரின் ஸ்டிரைக் ரே 238.46 என உயர்ந்தது. இந்த சீசனில் மொத்தமாக 5 இன்னிங்ஸில் 137 ரன்களை குவித்த சரத்குமார் திண்டுக்கல் அணியின் சிறந்த லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வெற்றிக்கு போராடினார்.
அதிரடி ஆட்டத்தில் மட்டுமல்ல சரத்குமார் வித்தியாசமான ஷாட்களை அபாரமாக விளையாடுகிறார். சேப்பாக்கத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் ராக்கி வீசிய 12-வது ஓவரில் 2-வது பந்தை முதலில் கவர் திசை நோக்கி அடிப்பதற்காக அவர் லேசாக பின்னோக்கி நகர்ந்தார். ஆனால், பவுலர் பந்தை விடுவிக்கும் கோணத்தை பார்த்து அதற்கேற்றார் போல் திட்டத்தை மாற்றிய அவர் ஆஃப் சைட் நோக்கி நகர்ந்து கிட்டத்தட்ட பிட்ச்சுக்கு வெளியே சென்று முட்டி போட்டு கீழே விழுந்து ஒரு அபாராமான பவுண்டரி அடித்தார். இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சர்வதேச கிர்க்கெட் வீரர் விளையாடுவதைப் போல இருந்தது.
இது மட்டுமல்ல, கோவைக்கு எதிராக குவாலிபயர் 1 போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய சரத்குமார் அதனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மைதானத்தில் வானவேடிக்கையையே நிகழ்த்திக் காட்டினார் என்று கூறலாம். தரமணி கண்ணன் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் வலது கை பேட்ஸ்மேனான சரத்குமார் திடீரென இடது கை பேட்ஸ்மேனாக மாறி ஒரு மாபெரும் சிக்ஸ் அடித்து மைதானத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இது போல சிக்ஸ் அடிப்பவர் யார் என்றால், ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல்தான். அதே போல சரத்குமார் திடீரென திரும்பி பவுலருக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் அவர் அடித்த 87 மீட்டர் சிக்சரைப் பார்த்து ரசிகர்களே மிரண்டு போய்விட்டார்கள். இப்படி, சரத்குமார் 360 டிகிரியில் புயலாக சுழல்கிறார்
தனது 32 வயதில்தான் சரத்குமார் தற்போது டி.என்.பி.எல் தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய அணியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எந்த சூழ்நிலையிலும் எப்படி பந்து வீசினாலும் அதிரடியாக அடித்து நொறுக்கி வித்தியாசமான ஷாட்களை விளாசி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் சூரியகுமார் யதாவை போலவே சரத்குமாரும் அடித்து துவம்சம் செய்கிறார்.
இந்த டி.என்.பி.எல் சீசனில் சரத்குமாரின் சூறாவளி ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் இவரை தமிழகத்தின் சூரியகுமார் யாதவ், டி.என்.பி.எல்-லின் கண்டுபிடிப்பு என்று பாராட்டி வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"