9-வது டி.என்.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த வாரங்களில் மொத்தம் 32 நடைபெறவுள்ளன. ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடைபெறும். இந்நிலையில், இன்று நடைபெறும் 4-வது போட்டியில், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதில், டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் இன்னிங்ஸை ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் ஆகியோர் தொடங்கினர். ராம் அரவிந்த் 34 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். பாலசந்தர் அனிருத் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை அளித்தார்.
இந்த ஜோடி பிரிந்த பிறகு, கேப்டன் என்.எஸ். சதுர்வேத் மற்றும் அதீக் உர் ரஹ்மான் ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை ஏற்றனர். என்.எஸ். சதுர்வேத் 26 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தார்
அதீக் உர் ரஹ்மான், 21 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் குவித்து எதிரணியை மிரள வைத்தார். ஆனால், சரவணன் 8 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இது தவிர கணேஷ் 17 ரன்களும், முருகன் அஷ்வின் ரன்களும் எடுத்தனர்.
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. அதன்பேரில், 165 ரன்கள் என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களமிறங்கியது.
அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் இருந்து அபிஷேக் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் முறையே 8 மற்றும் 6 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அடுத்தபடியாக கரம்கோர்த்து ஆடிய நிதிஷ் ராஜகோபால் மற்றும் கவின் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக, 41 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசிய நிதிஷ் ராஜகோபால், 60 ரன்கள் குவித்தார். இவரது விக்கெட்டை அஷ்வின் கைப்பற்றினார். மறுபுறம், கவினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் குவித்தார். சன்னி சந்தும் 15 ரன்கள் குவித்திருந்தார். இவர்கள் இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவாக, 18.4 ஓவர்களில் சேலம் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி அபார வெற்றி பெற்றது. மதுரை அணியில் இருந்து குர்ஜாப்நீத் சிங் மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.