Tokyo Olympics Badminton Update : 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந் தேதி கோலகலாமாக தொடங்கியது. இந்த போட்டித் தொடரில் இந்தியா சார்பில் 100-க்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், தற்போதுவரை இந்தியாவிற்கு பளுதூக்குதல் போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரு சில வீரர் மற்றும் வீராங்கனைகள் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், ஒரு சிலர் இன்னும் போட்டிகளில் நீடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கியவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இவர், தனது தொடக்க லீக் சுற்று ஆட்டங்களில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தார். இதன் காரணமாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூலை 29) நடைபெற்ற போட்டியில், டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டை எதிர்கொண்ட பி.வி.சிந்து தனது நிலையான ஆட்டத்தின் மூலம், 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதனையடுத்து அரையிறுதி போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஜப்பானின், யமகுச்சியுடன் பி.வி.சிந்து மோதினார். இன்று நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பதக்கத்தை உறுதி செய்துவிடலாம் என்ற முனைப்புடன் களமிறங்கிய சிந்து, 21-18, 21-12 நேர் செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார்.
இதனால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த சிந்து ஏமாற்றமடைந்தார். ஆனாலும் இந்த போட்டியில் பி.வி.சிந்து பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. வரும் 2-ந் தேதி நடைபெறும், வெண்கலப்பதக்கத்திற்காக போட்டியில், சீனாவின் ஹி பிங்யாஜிவோவை பி.வி சிந்து எதிர்கொள்கிறார். இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் சிந்து வெண்கலப்பதக்கத்துடன் நாடு திரும்பலாம். ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து இந்த இந்த போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்ககப்பட்ட நிலையில், இவர் இறுதிப்போட்டிக்கு செல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil