scorecardresearch

Ind vs Aus டி-20 டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு… ரசிகை மரணம்? இன்னும் பல முக்கிய விளையாட்டு செய்திகள்

Top 5 sports Tamil News: ஐதராபாத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டி20 போட்டிக்கான டிக்கெட்களை வாங்குவதில் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

top 5 sports news today, 22 September 2022 in tamil
Hyderabad Cricket Association – BCCI

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  1. கிரிக்கெட் டிக்கெட் வாங்க குவிந்த ரசிர்கள்… தடியடி நடத்திய போலீசார்

ஐதராபாத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டி20 போட்டிக்கான டிக்கெட்களை வாங்குவதில் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற நிலையில், 2வது போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. இதன்பிறகு, 3வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை வாங்குவதில் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போட்டி நடக்கவிருக்கும் ஐதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் கடல் போல் திரண்ட ரசிகர்களின் கூட்டத்தை கலைக்க முயன்ற போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

போலீசார் நடத்திய தடியடியில் ரசிகை ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் ரசிகர் இல்லை, மைதான ஊழியர் (ரஞ்சிதா) என்றும், அவர் தற்போது இறக்கவில்லை, பத்திரமாக உள்ளார் என்று செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2. மீண்டும் பழைய முறைக்கு திரும்பும் ஐபிஎல்…

IPL 2023, IPL, IPL in India, IPL in UAE, Indian Premier League, Sourav Ganguly, BCCI

ஐபிஎல்லில் ஹோம் மற்றும் அவே ஃபார்மட்டில் மீண்டும் அடுத்த சீசனிலிருந்து விளையாடப்படவுள்ளது. முன்னதாக, இந்தியாவில் நிலவிய கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிற்கு வெளியேயும், இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கடந்த 2 சீசனில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டது இந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து மீண்டும் பழைய முறை திரும்புகிறது ஐபிஎல்.

ஐபிஎல்லின் 2021 சீசன் முழுவதுமாக ஐக்கிய அரபு அமீரகத்திலும், 2022 ஐபிஎல்லின் முதல் பாதி மும்பை, அகமதாபாத், டெல்லி, சென்னையிலும், 2ம் பாதி அமீரகத்திலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அடுத்த சீசனை பழைய மாதிரி ஹோம் மற்றும் அவே ஃபார்மட்டில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார்.

3.ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர்…

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி தொடரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் லண்டனில் நாளை தொடங்குகிறது. இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்திய நேரப்படி, நாளை மாலை 5 மணியளவில் இந்த போட்டி தொடங்குகிறது.

உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட உள்ளார். இந்த தொடருடன் ரோஜர் பெடரர் ஓய்வு பெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

4. ஸ்மிருதி மந்தனா சாதனை…

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்றிரவு கேன்டர்பரியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்கிற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் அவர், 3 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார். இந்த இலக்கை விரைவாக எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த சாதனையை ஸ்மிருதி மந்தனா 76 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி நிகழ்த்தியுள்ளார். இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 88 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், அதனை மந்தனா முறியடித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா விரைவாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன், இந்திய அளவில் 3-வது வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார். அவருக்கு முன் ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து மந்தனா 76 போட்டிகளில் விளையாடி 3-வது இடத்தில் உள்ளார்.

5. ஐசிசி டி20 தரவரிசை: பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்

ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் (780 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (825 ரேட்டிங் புள்ளி) உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார்.

சிக்ஸர் மழை பொழியும் சூர்யகுமார்… ஸ்ட்ரீட் கிரிக்கெட் போல் ஆடுவது எப்படி?

லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14-வது இடத்திலும் கோலி 16-வது இடத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.

இதேபோல், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 ரேட்டிங் புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் 46 ரன்கள் (25 பந்துகள்) எடுத்திருந்தார். ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தைரியமும், வினோதமும் கொண்ட வீரன்… அசைக்கமுடியா நம்பிக்கையாக ஹர்திக் மாறியது எப்படி?

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Top 5 sports news today 22 september 2022 in tamil