US Open 2018: Naomi Osaka Wins US Open Title: நவோமி ஒசாகா டென்னிஸ் உலகில் புதிய நட்சத்திரம் ஆகியிருக்கிறார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பிரபல வீராங்கனை செரினா வில்லியம்ஸை வீழ்த்தினார் இவர்!
நவோமி ஒசாகா, ஜப்பானை சேர்ந்தவர்! இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 9) அதிகாலை 1.30 மணிக்கு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இறுதிப் போட்டியில் 6-2, 6-4 என நேர் செட்களில் செரினா வில்லியம்ஸை வீழ்த்தினார் நவோமி ஒசாகா. இவர் வென்ற முதல் கிராண்ட்சிலாம் தனிநபர் சாம்பியன் பட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானை சேர்ந்த வீரரோ, வீராங்கனையோ இதற்கு முன்பு கிராண்ட்சிலாம் தனிநபர் பட்டம் வென்றது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தோல்வியின் மூலமாக 24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற மார்க்ரெட்டின் சாதனையை சமன் செய்யும் செரினாவின் முயற்சி நிறைவேறாமல் போனது.
வரலாற்று வெற்றியை ஈட்டிய ஒசாகா போட்டி நிறைவில் உற்சாகத்தில் திளைத்தார். அதே நேரத்தில் அமெரிக்க ரசிகர்கள் தன்கள் நாட்டு வீராங்கனை செரினா வில்லியம்ஸின் தோல்வியை ஏற்க முடியாமல் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அவர்களின் கோபம், போட்டி நடுவரான கார்லோஸ் ராமோஸ் மீதுதான்! காரணம், 2-வது செட் ஆட்டத்தின்போது செரினாவுக்கு வெளியேயிருந்த அவரது பயிற்சியாளர் சில அறிவுரைகளை செய்கை மூலமாக காண்பித்தார். இது போட்டி விதிமுறைகளை மீறிய செயல்!
தொடர்ந்து ஆக்ரோஷத்துடன் மட்டையை விசிறியடித்தார் செரினா. இதனால் அவரது புள்ளிகளில் ஒன்று குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடுவர் ராமோஸ் தனது புள்ளிகளில் ஒன்றை திருடிவிட்டதாக அவருடன் வாக்குவாதம் செய்தார் செரினா. ஆக அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றில் சர்ச்சை மிகுந்த இறுதிப் போட்டியாக இது மாறியது.
இந்த சர்ச்சை மோதல்களுக்கு மத்தியில் 20 வயதான ஒசாகா, வெற்றியை முத்தமிட்டார். அவருக்கு 3.8 மில்லியன் டாலர் பரிசுத் தொகையுடன் சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது.
இந்த வெற்றி குறித்து நவோமி ஒசாகா கூறுகையில், ‘இங்கு ஒவ்வொருவரும் செரினாவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என எனக்குத் தெரியும். அவருக்கு ஏற்பட்ட இந்த முடிவுக்கு வருந்துகிறேன். எப்போதுமே எனது கனவு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செரினாவுடன் விளையாடுவதுதான். அதை எட்ட முடிந்ததற்காக மகிழ்கிறேன்’ என்றார் ஒசாகா.
தோல்விக்கு பிறகு செரினா கூறுகையில், ‘நான் ஏமாற்றிக் கொண்டிருந்ததாக ராமோஸ் (நடுவர்) கூறினார். நான் அப்படிச் செய்யவில்லை. இதர வீரர்கள் பலர் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்வதை பார்த்திருக்கிறேன். நான் பெண்கள் சமத்துவத்திற்காக இங்கு குரல் கொடுக்கிறேன்’ என்றார் செரினா.