இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் வீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வரும் இந்திய அணி, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 101 ரன்களும், கே.எல் ராகுல் 42 ரன்களும் எடுத்தனர். களத்தில் இருந்த கேப்டன் கில் 127 ரன்களும், பண்ட் 65 ரன்களும் எடுத்து இருந்தார்கள்.
தொடர்ந்து, இன்று சனிக்கிழமை 2ம் நாள் ஆட்டத்தில் கேப்டன் கில் - பண்ட் ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்தனர். இந்த ஜோடியை உடைக்க இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக போராடினர். கில் - பண்ட் இருவரும் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை அமைத்த சூழலில், கேப்டன் கில் 147 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனிடையே, 99-வது முடிவில் 145 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்த பண்ட் சோயிப் பஷீர் வீசிய 100-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர் வீரர்களில் அதிக சதம் (7 சதம்) விளாசிய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். தான் சதம் விளாசியதை கொண்டாடும் வகையில், சிக்ஸர் பறக்கவிட்ட கையுடன் தனது பேட் மற்றும் கையுறையை கழற்றி கீழே வைத்து மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்தார் பண்ட். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 178 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 134 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையுடன் இந்திய அணி 108.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்துள்ளது.