Rohit Sharma | Shubman Gill | India vs Afghanistan: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், சிவம் துபே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, 159 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் அரைசதம் விளாசி சிவம் துபே 60 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. இதன்மூலம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரோகித் சாதனை
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு தனித்துவமான உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
ரோகித் சர்மா இந்திய அணிக்காக தம்முடைய கேரியரில் இதுவரை 149 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 100 முறை இந்தியா வென்றுள்ளது. அந்த வகையில் 100 வெற்றிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த வரிசையில் 2வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் (86 வெற்றிகள்) உள்ளார்.
டக் -அவுட் - கில்லை திட்ட தீர்த்த ரோகித்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் 14 மாதங்கள் கழித்து மீண்டும் டி20 அணிக்கு திரும்பிய இந்திய கேப்டன் ரோகித் டக் -அவுட் ஆகியதால் ஆத்திரமடைந்த அவர், தொடக்க வீரரான சுப்மன் கில்லை திட்டி தீர்க்கும் வீடியோ இணையதத்தில் வைரலாகிறது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2022ல் நடந்த டி20 அரையிறுதி ஆட்டத்தில் விளையாடிய ரோகித் 14 மாதங்கள் கழித்து மீண்டும் டி20 அணிக்கு நேற்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் திரும்பினார். கடந்தாண்டில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் அணிக்கு அதிரடியாக தொடக்கம் கொடுத்து வந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
159 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர்.அப்போது ரோகித் அடித்த பந்தை கவனித்த கில் அது ஆப்கானிஸ்தான் பீல்டரின் கைகளில் சிக்கியதும் ஓடாமல் கிரீசுக்குள்ளேயே நின்றுவிட்டார்.
ஆனால் மறுமுனையில் ரோகித் கில்லை கவனிக்காமல் ரன் எடுக்க ஓடினார். அவர் மீண்டும் கிரீசுக்குள் செல்லும் முன் ஆப்கானிஸ்தான் வீரர்களால் ரன் அவுட் செய்யப்பட்டார். வெறும் 2 பந்துகள் மட்டுமே சந்தித்த ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரோகித், சுப்மன் கில்லை திட்டியவாறே பெவிலியனுக்கு செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“