10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: WATCH: Shubman Gill loses cool in heated discussion with umpires during GT vs SRH match
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 76 ரன்களில் எடுத்த அவர் துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். கில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
பட்லர் அடித்த பந்தை பீல்டர் பிடித்து விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசெனிடம் வீசினார். கிளாசென் பந்தை பிடிக்காமல் அப்படியே ஸ்டம்புக்கு திருப்பியபோது, பந்து முதலில் ஸ்டம்பில் பட்டதா? அல்லது அவரது கையுறை ஸ்டம்பு மீது முதலில் பட்டதா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனை பல கோணங்களில் ஆராய்ந்த 3-வது நடுவர் அவுட் வழங்கினார்.
இதனால் சுப்மன் கில் அதிருப்தியுடன் வெளியேறினார். அத்துடன் பெவிலியன் திரும்பிய சுப்மன் கில் பவுண்டரிக்கு வெளியே நின்று கொண்டிருந்த நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.