Veteran Car Racer KE Kumar Dies In Crash At Event near Chennai tamil news: சென்னையை அடுத்து இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் உள்ள MRF MMSC FMSCI இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வீரர் கே.இ குமார் (வயது59) கலந்து கொண்டார்.
இந்த போட்டியின் போது குமாரின் கார் கோர விபத்தில் சிக்கியது. இதனால், அவரின் கார் பலத்த சேதமடைந்தது. உடனடியாக மூத்த வீரர் குமார் காரில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் பலத்த காயம் அடைந்ததால் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
இந்த கார் பந்தயம் யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட நிலையில், மூத்த வீரர் குமாரின் கார் எப்படி விபத்துக்குள்ளானது என்பது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அந்த வீடியோவில், குமார் தனது காரை வேகமாக ஓட்டி வருகிறார். அப்போது, அவரது கார் இடது பக்கத்தில் இருக்கும் மற்றொரு காரின் முன்பக்கத்துடன் மோதுகிறது.
இதனால் அவரின் கார் ட்ராக்கில் இருந்து வெளியே செல்கிறது. மேலும், அங்கியிருக்கும் வேலியின் மீது கார் மோதியதால், அது தூக்கி வீசப்பட்டு, குப்புற கவிழ்கிறது. அதனால், குமார் அந்த ஈடுபாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொள்கிறார்.
இதன்பிறகு உடனடியாக அந்த இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அங்கு பந்த மைதானத்தில் இருக்கும் மருத்துவ மையத்தில் முதற்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. பிறகு ஆம்புலன்சில் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார்.
"இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். குமார் ஒரு அனுபவம் வாய்ந்த பந்தய வீரர். பல வருடங்களாக அவரை ஒரு நண்பராகவும் போட்டியாளராகவும் நான் அறிவேன். MMSC மற்றும் ஒட்டுமொத்த பந்தய சகோதரத்துவமும் அவரது மறைவுக்கு இரங்கல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது," என்று கார் பந்தய நிகழ்வின் தலைவர் விக்கி சந்தோக் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/