தமிழகத்திற்கு என சில செலக்டிவ் செல்லப் பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. ஜார்கண்ட் மாநிலத்தில் அவர் பிறந்து வளர்ந்திருந்தாலும், தமிழகம் அவரை இன்றளவும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.
கிரிக்கெட் மூலம் தான் அவர் உலகளவில் புகழடைந்தார். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, கிரிக்கெட் மட்டும் காரணமல்ல.. அதையும் தாண்டிய உறவு அது. என் இரண்டாவது வீடு 'சென்னை' தான் என்பதை தோனி பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் இரண்டு ஆண்டுகால தடையின் போது, தோனி புனே அணிக்காக ஆடி வந்தார். அதில், தோனி சில கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது. அதன்பிறகு, தடை முடிந்து 2018ம் ஆண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் திரும்பிய போது, சென்னை அணிக்கு தோனியும் திரும்பினார், கேப்டனாக.
அப்போது, அதற்கான ஒப்பந்தங்களில் தோனி கையெழுத்திடும் வீடியோ ஒன்றை தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டிருந்தார். அதில், 'நாம் மீண்டும் வீட்டுக்குப் போகிறோம்... வீட்டுக்குப் போகிறோம்' என்று சாக்ஷி தனது மகள் ஜிவாவிடம் சொல்லும் போது, அவரது முகத்திலும், குரலிலும் அவ்வளவு ஆனந்தம், உற்சாகம். தோனி மட்டுமில்லாது அவரது குடும்பமே அந்தளவிற்கு தமிழகத்தை நேசிக்கிறது.
இந்நிலையில், பிரபல தமிழ் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "என் வாழ்வின் மிகவும் நிறைவான தருணம் இது. இந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்ற எனது வாழ்நாள் ஆசை நிறைவேறிவிட்டது. கடவுளுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக அவர் குறிப்பிட்டது தான் ஹைலைட்.. "ஒருநாள் தோனி இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதே எனது கனவு" என்று பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட், ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.