33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
தகுதிநீக்கம்
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த நிலையில், வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், 'இனி என்னிடம் போராட சக்தியில்லை' என்று கூறி மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
முறையீடு
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தரப்பில் நாட்டின் மிக முன்னணி வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே, சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் நேற்று மாலை ஆஜராகினார். அப்போது, வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும், வழக்கை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என்றும் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, வினேஷ் போகத் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, 'முதல் நாளில் வினேஷ் போகத் எடை சரியாக இருந்தது என்றும், மறுநாள் எடை கூடியது விதிகளை மீறியது அல்ல. கூடுதலாக இருந்த 100 கிராம் எடையின் காரணமாக வினேஷ் போகத்துக்கு போட்டியில் சாதகமான சூழல் அமைந்துவிடாது.
கோடைகால வெப்பத்தின் காரணமாக கூடுதல் தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றுக்கும் மேல் வீராங்கனையின் உடல்நலம் முக்கியம் குறைவான நேர இடைவேளியுடன் கூடிய போட்டி அட்டவணை ஆகியவை முக்கிய காரணங்கள் என்றும் அவர் வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு
இந்த நிலையில், வினேஷ் போகத் வழக்கில் இன்று இரவு 9.30 மணிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தீர்ப்பு நாளை (ஆகஸ்ட் 11) அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நாளையுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“