33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமாக இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர். மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டத்தில் இறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் வினேஷ் போகத் முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் சாம்பியனை வீழ்த்திய வினேஷ் போகத்
முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் வினேஷ் போகத் - உக்ரைனின் ஒக்ஸானா லிவாச் உடன் மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில், காமன்வெல்த் விளையாட்டில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று இரவு 10:35 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் உடன் மோத உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
நடப்பு சாம்பியனை தூக்கி அடித்த வினேஷ் போகத்
முன்னதாக, வினேஷ் போகத் 3-2 என்ற கணக்கில் ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஜப்பானிய மல்யுத்த வீராங்கனை தற்போதைய ஒலிம்பிக் சாம்பியனாகவும், நான்கு முறை உலக சாம்பியனாகவும் இருந்து வருகிறார். அவர் 2020ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்காமல் தங்கம் வென்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இறுதிப் போட்டிக்கு வந்ததன் மூலம் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் வினேஷ் தனது பாரிஸ் ஒலிம்பிக் ஒதுக்கீட்டை லாக் செய்தார். அவர் இந்தப் போட்டிக்கான அரையிறுதியில் லாரா கனிகிசியை தோற்கடித்தார்.
வினேஷ் போகத் ரியோ 2016 மற்றும் டோக்கியோ 2020 ஆகிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் காலிறுதியுடன் வெளியேறினார். ரியோ 2016 இல், அவர் தனது போட்டியின் போது காயத்தால் பாதிக்கப்பட்டு ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம், அதிக முறை ஒலிம்பிக் போட்டிகளில் களமாடிய முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“