virat kohli : இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் காணாமல் போன வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு என்ன ஆனது? அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பல சுவாரசியங்கள், சீண்டல்கள் என ஏதாவது ஒரு விஷயம் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் நேற்று நடைப்பெற்ற போட்டி இந்திய ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருந்தது. பாகிஸ்தான் வீரர்களை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஓட வைத்தனர்.
ஆரம்பத்தில் பேட்டிங்கில் கலக்கிய இந்திய அணி ஃபீல்டிங்கிலும் ஒருகைப்பார்த்தது. குறிப்பாக குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா பந்துகளை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். பாகிஸ்தானின் முதல் விக்கெட்டி வீழ்த்தி விராட் கோலியின் பாராட்டு மழையில் நனைந்தார் தமிழக வீரர் விஜய் சங்கர்.
ஆனால் இந்த போட்டியில் நடந்த மற்றொரு சோகமான நிகழ்வு என்வென்றால் அது வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பாதியில் காணாமல் போனது தான். புவனேஷ்வர்குமார் தனது 3-வது ஓவரை வீசிய போது அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர் அத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு மைதானத்தில் புவனேஷ்வர்குமாரை காணவில்லை. போட்டி முடிந்த பின்பு, வீரர்களின் கொண்டாட்டத்திலும் அவர் தென்படவில்லை. இந்நிலையில், புவனஷ்வர் அடுத்த போட்டிகளில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. இந்நிலையில்,இதுக் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
இதுக் குறித்து விராட் கூறியிருப்பதாவது, “ தசைபிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள புவனேஷ்குமார், குறைந்தபட்சம் அடுத்த 2 போட்டிகளுக்கு விளையாட மாட்டார். புவனேஷ்குமாருக்கு பதிலாக முகம்மது சமி விளையாடுவார் ” என தெரிவித்தார்.
ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங்கில் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படும் ஷிகர் தவான் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாமல் விலகினார். அவருக்கு பதிலாக விஜய் சங்கர் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பவுலிங்கில் தனக்கென தனி ஸ்டைலை கொண்டிருக்கும் புவனேஷ்வரும் காயம் காரணமாக விலகி இருப்பது இந்திய அணிக்கு லேசான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி, வரும் ஜுன் 22 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியையும், மேற்கிந்திய தீவுகள் அணியை ஜூன் 27 ஆம் தேதியும், இங்கிலாந்து அணியை 30 ஆம் தேதியும் எதிர்கொள்கிறது