இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் மிரட்டி எடுத்த ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை கைப்பற்றினார்.
கோலியை கலாய்க்கும் ரசிகர்கள்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் பேட்டிங் ஆட வந்த கோலி, 8 பந்தில் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 7 ரன்னுக்கு அவுட் ஆனார். கடந்த வாரம் பெர்த்தில் தனது 30வது டெஸ்ட் சதத்தை அடித்து விளாசிய கோலி, இன்று முதல் நாள் பிங்க்-பால் டெஸ்ட் போட்டியில் பெரிதும் சோபிக்காமல் வெளியேறினார். அவர் மிட்செல் ஸ்டார்க்கின் சார்ட் லெங்த் பந்தை கட் செய்து ஆட முயன்று கேட்ச் ஆனார்.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் ஜோஷ் ஹேசில்வுட் இதேபோன்ற ஒரு பந்தில் அவரைத் தொந்தரவு செய்து கோலியின் விக்கெட்டை கைப்பற்றினார். தற்போது கோலி அதேபோன்ற பந்துக்கு மீண்டும் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இந்த நிலையில், கோலி ஆட்டமிழந்து இருப்பது குறித்து கலாய்த்து வரும் ரசிகர்கள் அவரது பேட்டிங் நுட்பம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“