ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நேற்று வியாழக்கிழமை (டிச.26) முதல் பாக்சிங் டே போட்டியாக தொடங்கி நாடடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வரும் நிலையில், 2-ம் நாள் முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் பண்ட் 6 ரன்னுடனும், ஜடேஜா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 310 ரன்கள் பின்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நாளை சனிக்கிழமை 3-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
36 ரன்னில் அவுட்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 36 ரன்கள் எடுத்த விராட் கோலி கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார்.
கலாய்த்த ரசிகர்கள் - கடுப்பான கோலி
இந்த நிலையில், விராட் கோலி ஆட்டமிழந்து பெவிலியன் சென்றபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர். அதனை பொறுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்த விராட் கோலியை சிலர் எல்லை மீறி விமர்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த விராட் திரும்பி வந்து அவர்களை முறைத்து பார்த்தார். இதனைக்கண்ட அங்கிருந்த பாதுகாவலர் கோலியை சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.