துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாகப் பாகிஸ்தான் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.
இந்த போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்படவில்லையே அவருக்குப் பதிலாக மீதமிருக்கும் போட்டிகளில் இஷான் கிஷனை களமிறக்குவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
சட்டென்று கோபப்பட்ட கோலி, " ரொம்ப துணிச்சலான கேள்வி. என்ன நினைக்கிறீர்கள் சார். உலகிலேயே தலைசிறந்த வீரர்களைக் கொண்ட அணியை வைத்து நாங்கள் விளையாடுகிறோம். நான் உங்களிடம் கேட்கிறேன். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட முடியுமா.
உங்களால் அவரை அணியிலிருந்து நீக்க முடியுமா. கடைசியாக நாங்கள் விளையாடிய ஆட்டத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா? இந்த கேள்வி நம்பமுடியாததாக இருக்கிறது என ஆவேசத்துடன் புன்னகை சிரிப்பையும் கொண்டு வந்தார்.
தொடர்ந்து பேசுகையில், "நீங்கள் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டால் முன்கூட்டியே கூறிவிடுங்கள், அதற்கு ஏற்றார்போல் பதில் அளிப்பேன்" என தெரிவித்தார்.
இதற்கிடையில், தோல்விக்கு பின் பேசிய இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, "திட்டங்களை சரியாக வெளிப்படுத்தவில்லை.பனியின் தாக்கமும் இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டனர். 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்தது ஏற்புடையது அல்ல. பனியின் தாக்கம் உள்ள நிலையில், அதிலிருந்து மீண்டு வருவது எளிதானது அல்ல.
நாங்கள் 15-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க முடியும். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிற்ப்பாக பந்துவீசி, அதிக ரன்களை அடிக்கவிடவில்லை. அணி தற்போது பலமானதாக தான் இருக்கிறது. இது முதல் போட்டிதான். கடைசி போட்டி கிடையாது" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.