/indian-express-tamil/media/media_files/2025/06/06/9TQvW8I4jRHLctq6BF0T.jpg)
பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம் ஆர்.சி.பி அணி வீரர் விராட் கோலி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நைஜா ஹோரடகரர வேதிகேவைச் சேர்ந்த ஏ.எம். வெங்கடேஷ் இந்த புகாரை கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
10 அணிகள் களமாடிய 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 18 ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றது.
இந்நிலையில், 18 ஆண்டுக்குப் பின் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. பெங்களூரு நகரில் நடைபெற்ற இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள், ஆர்.சி.பி அணி வீரர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் மைதானத்திற்குள் செல்ல முந்தியடித்தனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், ஆர்.சி.பி அணி நிர்வாகம், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தானாக முந்து விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியது. மேலும், 15 நாட்களில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதனிடையே, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறியதற்காக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா உள்பட பல்வேறு மூத்த காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படுவதுடன், கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கோலி மீது புகார்
இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம் ஆர்.சி.பி அணி வீரர் விராட் கோலி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நைஜா ஹோரடகரர வேதிகேவைச் சேர்ந்த ஏ.எம். வெங்கடேஷ் இந்த புகாரை கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். இது குறித்து இன்னும் கூடுதல் விவரங்கள் வெளிவரவில்லை. இருப்பினும், கோலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வெங்கடேஷின் புகாரை போலீசார் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் உடன் சேர்த்து, வெங்கடேஷின் புகார் விசாரணைக்கு பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கப்பன் பார்க் காவல் நிலையத்தில் 2 கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த ரோலண்ட் கோம்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், ஆர்.சி.பி அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் விழா ஏற்பாட்டு நிறுவனம் மீது பி.என்.எஸ் பிரிவு 125(ஏ) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.