Watch. Video: Virat Kohli Took A Revenge On Gautam Gambhir For His Crowd-Silencing Gesture Tamil News
Virat Kohli Took A Revenge On Gautam Gambhir Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (திங்கள்கிழமை) லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ வீரர் க்ருனால் பாண்டியாவின் கேட்சை பிடித்த பின் ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன் இணையத்தை அதிர வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 10ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 9 விக்கெட்டுகளை, கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. இதன் மூலம், லக்னோ ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்திற்கு பிறகு வீரர்களுடன் கை குலுக்க களம் புகுந்த லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் பெங்களூரு அணியின் ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து "சத்தம் வரக்கூடாது" என்பது போன்ற செய்கை செய்தார். அது அப்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. கம்பீர் வாயில் விரலை வைத்து ரசிகர்களை அதட்டும் அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியது.
இந்த நிலையில், தற்போது விராட் கோலி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, லக்னோ மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களை நோக்கி "சத்தம் வரக்கூடாது" என்பது போன்ற கம்பீரின் செய்கை செய்து காட்டி ”அமைதியாக இருக்க வேண்டாம் இன்னும் சத்தம் எழுப்புங்க” என்பது போல் செய்கை காண்பித்தார். இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் பெரும் சத்தம் எழுப்பினர்.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் லக்னோ அணியை பெங்களூரு 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 127 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மேயர்ஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் ஆயுஷ் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தற்போது 10 புள்ளிகளுடன், -0.030 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.