இந்திய அணி வீரர்கள் தங்கள் டெஸ்ட் ஸ்கோர்களை பொதுதளங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ம் தேதி முதல் பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்த தொடர் நடப்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
இந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து திரும்பிய மற்றும் அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு செல்லாத வீரர்களுக்கு 13 நாள் பயிற்சி முகாம் போடப்பட்டுள்ளது. இந்த முகாமில் உடற்தகுதி பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களுக்கு ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட முழுமையான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பயிற்சியாளர்கள் வீரர்களின் உடற்தகுதியை சோதிப்பார்கள். தரநிலைகளை பூர்த்தி செய்யாத வீரர்களுக்கு மேலும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த உடற்தகுதி பயிற்சியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே, இந்திய அணி நிர்வாகம் நேற்று வியாழக்கிழமை 6 நாள் கண்டிஷனிங் முகாமை தொடங்கியது. இதில், வீரர்கள் ஒவ்வொருவரும் உடற்தகுதியின் அடிப்படையில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை மதிப்பிடுவதற்காக யோ-யோ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கோலியின் யோ-யோ டெஸ்ட் ஸ்கோர்
இந்நிலையில், யோ-யோ சோதனையை முடித்த முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகியது. "அபாரமான கூம்புகளுக்கு இடையில் யோ-யோ சோதனையை முடித்தில் மகிழ்ச்சி" என்று கோலி பதிவிட்டு இருந்தார். மேலும், தான் 17.2 ஸ்கோர் பெற்று இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.
பி.சி.சி.ஐ உத்தரவு
இந்த நிலையில், விராட் கோலி தனது யோ-யோ டெஸ்ட் ஸ்கோரை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்திய அணி நிர்வாகம் அதன் வீரர்களை தங்கள் உடற்பயிற்சி ஸ்கோர்களை பொதுதளங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக பெங்களூரில் உள்ள ஆலூர் முகாமில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வாய்மொழியாக' அறிவுறுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துகொண்டுள்ளது. “எந்தவொரு ரகசியமான விஷயத்தையும் சமூக ஊடக தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வீரர்களுக்கு வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயிற்சி படங்களை பதிவிடலாம். ஆனால் ஸ்கோர்களை பதிவிடுவது ஒப்பந்த விதியை மீறுவதற்கு வழிவகுக்கிறது, ”என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil