/indian-express-tamil/media/media_files/2025/01/19/heBUsWN5r9lWAoV2kUlk.jpg)
இன்றுடன் (ஜன 19) மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதே மைதானத்தில் தான் கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இந்த கிரிக்கெட் மைதானத்தின் 50 ஆண்டு கால பயணத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவை இன்றைய தினம் பிரம்மாண்ட இசைக் கச்சேரியுடன் நிறைவு பெறுகிறது. "வான்கடேவின் வரலாற்றை பறைசாற்ற வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு இதனை கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு நிர்வாகத்தினர் தங்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளனர்" என மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அஜிங்க்யா நாயக் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Wankhede stadium turns 50: Dhoni’s six, Tendulkar’s dressing-room question, Vengsarkar’s tears, and the origin story
இந்த கிரிக்கெட் மைதானம் எண்ணிலடங்காத கதைகளை சுமந்து நிற்கிறது. இவை அனைத்தும் டிக்கெட் விநியோகம் தொடர்பான சர்ச்சையுடன் தொடங்கியது. அதுவரை அனைத்து சர்வதேச போட்டிகளையும் நடத்திய இந்திய கிரிக்கெட் கிளப் (சிசிஐ) க்கு சொந்தமான பிரபோர்ன் ஸ்டேடியத்துடன், பம்பாய் கிரிக்கெட் சங்கம் (பிசிஏ) கருத்து வேறுபாடு கொண்டிருக்கவில்லை என்றால் வான்கடே மைதானம் அமைக்கப்பட்டிருக்காது.
டிக்கெட் விநியோகம் தொடர்பான சர்ச்சை, மகாராஷ்டிரா சட்டசபை முன்னாள் சபாநாயகர் பாரிஸ்டர் ஷேஷ்ராவ் வான்கடேவை காயப்படுத்தியது. அவர் தனது கிளப் உறுப்பினர்களுக்காக ஒரு சர்வதேச போட்டிக்கான கூடுதல் டிக்கெட்டுகளை கேட்டார். ஆனால் பிரபோர்ன் ஸ்டேடியத்தின் தலைவரான முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் விஜய் மெர்ச்சன்ட், அந்த கோரிக்கையை மறுத்தார். சில மாதங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிரா அரசாங்கம் ஒரு கண்காட்சி விளையாட்டை நடத்த விரும்பியது. இந்த கோரிக்கையும் மறுக்கப்பட்டது. இதனால், புதிய மைதானத்தை அமைக்க வான்கடே முடிவு செய்தார்.
பி.சி.சி.ஐ-யின் முன்னாள் இணைச் செயலாளரும், மூத்த ஓய்வுபெற்ற நிர்வாகியுமான ரத்னாகர் ஷெட்டி, இது குறித்த நிகழ்வுகளை விவரித்தார். "மகாராஷ்டிரா அரசிடமிருந்து நிலம் ஒதுக்கப்பட்டது. அப்போது விளையாட்டு துறை அமைச்சரகாக ஷரத் பவார் பதவி வகித்தார். அன்றைய சூழலில், சங்கத்தினரிடம் போதுமான நிதி வசதி இல்லை. இதனால் நன்கொடை வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. டாட்டா மற்றும் கார்வேர் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இதனால் தான் வான்கடே மைதானத்தின் இரு முனைகளுக்கு டாட்டா மற்றும் கார்வேர் எனப் பெயரிடப்பட்டது" என்று ஷெட்டி தெரிவித்துள்ளார்.
அந்த நிலம் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் மைதானமாக இருந்தது. மேலும், அந்த நிலம் மும்பை பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஒரு புறம் ரயில்வே தண்டவாளம், மறுபுறம் ஹாக்கி மைதானம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருந்த இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டுவது சவாலாக இருந்தது. "இந்த மைதானம், கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி மற்றும் கால்பந்து போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை சுமந்து இருக்கிறது" என்று ஷெட்டி கூறியுள்ளார்.
1983 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது, இந்த மைதானம் தான் அணிகளின் புகைப்பட அமர்வுகளைக் கண்டது. 2007 ஆம் ஆண்டில், T20 உலகக் கோப்பையை வென்ற அணியை, இதே மைதானத்தில் கௌரவித்தனர். 2011-ஆம் ஆண்டில் உலகக் கோப்பை இந்திய அணி, இதே மைதானத்தில் தான் வென்றது.
இந்த மைதானத்தில் சோகமான தருணங்களும் இருக்கின்றன
புகழ்பெற்ற 1990-91 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் மும்பை அணி, ஹரியானாவிடம் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்றபோது, அரங்கம் முழுவதும் அழுததை தான் பார்த்ததாக நாயக் கூறுகிறார். “திலீப் வெங்சர்க்கார் அழுதார்; மொத்த ரசிகர்களும் அழுதனர். ஆண்கள் அழுவதை நான் பார்த்ததில்லை. ஆனால் அன்று முழு அரங்கமும் அழுதது,” என்று நாயக் நினைவு கூர்ந்தார்.
"பழைய ஸ்டேடியத்தின் சூழல் வித்தியாசமாக இருந்தது. ஒரு முனையில் பயிற்சியாளர் அச்ரேக்கர் அமர்ந்திருந்தார். வீரர்கள் மோசமாக விளையாடினால் அவர் அங்கிருந்து சத்தமிடுவார்" என முன்னாள் வீரர் பிரவின் ஆம்ரே கூறியுள்ளார்.
இதேபோல், பிரபல கிரவுண்ட்ஸ்மேன் வசந்த் மோஹிதேவும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். "ட்ரெஸ்ஸிங் ரூமில் தான் எங்கு அமர வேண்டும் என சச்சின் அடிக்கடி என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். ஏனெனில், பெரும்பாலான நேரத்தில் அனைத்து இருக்கைகளிலும் மற்றவர்கள் அமர்ந்திருப்பார்கள். 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், தோனி சிக்சர் அடித்து வெற்றிபெறச் செய்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வான்கடே மைதானம், இன்றும் பல வீரர்களின் புனிதஸ்தலமாக இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.