இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஐதராபாத்தில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சதம் விளாசி 111 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூரியகுமார் 75 ரன்களும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஐதராபாத்தில் சிக்ஸர் மழை - ருத்ரா தண்டம் ஆடிய சஞ்சு
இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஜோடி களமிறங்கினர். இதில், அபிஷேக் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் ஜோடி அமைத்த சஞ்சு பவுண்டரி, சிக்ஸர் என மாறி மாறி அடித்து நொறுக்கினார். அவர் 21 பந்தில் அரசைதம் அடித்து, தான் ரன் வேட்டையை தொடக்க இருப்பதற்கான சிக்கனல் கொடுக்க, அவரைக் கட்டுப்படுத்த வங்கதேச பவுலர்கள் போராடினர்.
களத்தில் ருத்ரா தண்டம் ஆடிய சஞ்சு ரிஷாத் ஹொசைன் வீசிய 10-வது ஓவரில் முதல் பந்தை தவிர்த்து, அடுத்த 5 பந்துகளில் வரிசையாக சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார். முதல் 4 சிக்ஸர்களை பவுலரின் தலைக்கு மேல் பறக்க விட்ட அவர், கடைசி சிக்ஸரை சற்று விலகி லெக் சைடு கர்னருக்கு அனுப்பி வைத்தார்.
அவரது வான வேடிக்கையை ரசித்த ஐதராபாத் ரசிகர்கள் கூடுதல் குஷியானார்கள். தொடர்ந்து தனது சிக்ஸர் மழையை நிறுத்தாத அவர் தனது 40-வது பந்தில் பவுண்டரியை விரட்டி அடித்து சர்வதேச டி20-யில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் மொத்தமாக 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்தியாவின் ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. சஞ்சு 40 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“