MS Dhoni - IPL 2023 - Chennai Super Kings Tamil News: 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலான கருத்துக்கள் நிலவி வந்தது. ஆனால், தனது ஓய்வு குறித்து அவர் இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவும் இல்லை, அது தொடர்பாக அவர் பொதுவெளியில் பேசியதும் இல்லை.
இந்நிலையில், லக்னோவில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3:45 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த டாசின் போது தொகுப்பாளர் டேனி மோரிசன், இது உங்கள் கடைசி ஐபிஎல்…மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சியடைகிறீர்களா? என்று தோனியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி, 'இது தான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்… ஆனால், நான் முடிவு செய்யவில்லை' என்று கூறினார்.
உடனடியாக டேனி மோரிசன் தோனியை, பார்த்து நீங்கள் அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பீர்கள் எனக்கு தெரியும்' என்றார். பின்னர் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி பேசிய மோரிசன், தோனி மீண்டும் வருவார்.. அவர் அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வருவார்' என்று கூறினார்.
கடந்த வாரம், ஈடன் கார்டனில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தோனி, தனது ஓய்வு வதந்திகளை தூண்டிவிட்டார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு தோனி பேசுகையில், “ரசிகர்களின் ஆதரவுக்கு நான் நன்றி சொல்வேன். அவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த முறை கொல்கத்தா அணியின் ஜெர்சியில் வருவார்கள். அவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க முயற்சிக்கிறார்கள். எனவே, ரசிகர்களின் கூட்டத்திற்கு மிக்க நன்றி." என்று கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil