WPL 2024 | Tamilnadu Cricket Team: பெண்களுக்கான 2வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 2-வது அல்லது 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. நடைமுறை சிக்கல் காரணமாக இத்தொடர் இந்த முறையும் ஒரே மாநிலத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அல்லது உத்தரபிரதேசத்தில் நடத்தப்படலாம் என்றும், மேலும் சில இடங்களும் பரிசீலனையில் உள்ளன என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மினி ஏலம்
இந்நிலையில், டபிள்யூ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்த வீராங்கனைகளின் ஏலத்தில் சர்வதேச போட்டியில் ஆடாத வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை காஷ்வீ கவுதமை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது.
இதன்மூலம் இந்தப் பிரிவில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை என்கிற பெருமையை காஷ்வீ கவுதம் பெற்றார். 20 வயதான காஷ்வீ கவுதம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் பந்து வீச்சு மட்டுமின்றி பின்வரிசையில் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்.
முதல் தமிழக வீராங்கனை
இந்நிலையில், டபிள்யூ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனையான கீர்த்தனா பாலகிருஷ்ணனை அவரது அடிப்படை விலை ரூ. 10 லட்சத்துக்கு நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதன்மூலம் கீர்த்தனா, தமிழ்நாட்டிலிருந்து மகளிர் பிரீமியர் லீக்கில் (டபிள்யூ.பி.எல்) விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார்.
யார் இந்த கீர்த்தனா?
/indian-express-tamil/media/post_attachments/2071a0584af5b0a7d26c1473ed751d968457963b45163c0c5fc815e2b13fdb7a.jpg)
கீர்த்தனா பாலகிருஷ்ணன் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் இளம் வீராங்கனை ஆவார். இவர் இந்திய கிரிக்கெட் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த அபினவ் முகுந்தின் தந்தை டி.எஸ்.முகுந்தின் அகாடமியில் பயிற்சி பெற்றார். அடிப்படியில் இவர் ஒரு லெக் ஸ்பின்னராக அறியப்படுகிறார். மேலும், லோயர் மிடில் ஆர்டரில் பயனுள்ள ரன்களை குவித்து, பேட்டிங்கிலும் கைகொடுக்கிறார். மொத்தத்தில் ஒரு ஆல்ரவுண்டராக வலம் வருகிறார்.
கீர்த்தனாவின் தந்தை ஒரு டாக்ஸி டிரைவர் என செய்திகள் வெளியான நிலையில், இதுதொடர்பாக பேசிய என்.சி.ஏ பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன் டாக்சிகளாகச் செல்லும் கார்களை வைத்திருக்கிறார் என்று உறுதிப்படுத்தினார்.
23 வயதான கீர்த்தனா, தமிழ்நாடு பெண்கள், இந்திய பசுமை பெண்கள், தென் மண்டல பெண்கள் மற்றும் ஆரஞ்சு டிராகன்ஸ் பெண்கள் ஆகிய 4 அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதேபோல், இந்திய கிரிக்கெட்டின் அணியில் உள்ள சில முன்னணி வீராங்கனைகளுடனும் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
2021-22 பிரேயர் கோப்பை தொடரில் அவர் 34 சராசரி மற்றும் 86 ஸ்ட்ரைக் ரேட்டில் 102 ரன்கள் எடுத்தார். அதுமட்டுமின்றி, அவர் 4 விக்கெட்டுகளையும் எடுத்தார். ஒரு நாள் போட்டிகளில் தமிழ்நாடு மகளிர் அணிக்காக விளையாடி 3 மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஒரு ஆல்-ரவுண்டராக இருப்பதால், கீர்த்தனா தனது மும்பை இந்தியன்ஸ் அணியின் சக வீராங்கனைகளிடம் இருந்து, குறிப்பாக ஹர்மன்ப்ரீத், இஸ்ஸி வோங், ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மற்றும் அமெலியா கெர் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“