/indian-express-tamil/media/media_files/2025/05/14/RW4rpX7Lp06rgg9qOxdi.jpg)
2025ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள இந்த முக்கியமான போட்டி ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இரு அணிகளும் தங்களது வலிமையான வீரர்களைக் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளன.
தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ள அணியில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சேனுரான் முத்துசாமி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா WTC இறுதிப்போட்டி அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ யான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி இன்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், சேனுரன் முத்துசாமி, டேன் படர்சன்.
ஆஸ்திரேலியா WTC இறுதிப்போட்டி அணி: கம்மின்ஸ் (கேப்டன்), போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னேமன், லபுசனே, நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ள இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சேனுரான் முத்துசாமி, தென்னாப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும், அவரது பூர்வீகம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் ஆகும். 31 வயதான சேனுரானின் குடும்பம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். அவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும், தனது உறவினர்களைப் பார்க்க இரண்டு முறை தமிழகத்திற்கு வந்துள்ளார்.
2013 முதல் தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சேனுரான், இதுவரை பந்துவீச்சில் 262 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 9 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 5111 ரன்களையும் குவித்துள்ளார்.
அவரது அபாரமான ஆல்ரவுண்டர் திறமையின் காரணமாக, 2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவருக்கு சர்வதேச அறிமுகம் கிடைத்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், தனது முதல் விக்கெட்டாக விராட் கோலியை வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.
அதன் பிறகு தென்னாப்பிரிக்க அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியாவிட்டாலும், சமீபத்திய தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
இந்த முக்கியமான போட்டியில் அவர் இடம்பெற்றுள்ளதன் மூலம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் மற்றொரு முக்கிய சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1998ஆம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் கோப்பையை வென்ற பிறகு, கடந்த 27 வருடங்களாக எந்த ஒரு பெரிய கோப்பையையும் வெல்லாத தென்னாப்பிரிக்க அணி, இந்த WTC இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது.
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேனுரான் முத்துசாமியின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த இறுதிப்போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.