India vs England 3rd Test Rajkot: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 455 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 131 ரன்களையும், ஜடேஜா 112 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள், ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள், ஆண்டர்சன் , ஹார்ட்லி, ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இனிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 238 ரன்கள் பின்தங்கியுள்ளது. சதம் அடித்து மிரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 133 ரன்னுடனும், ரூட் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
போனஸ் ரன்
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த தவறால் இந்திய அணிக்கு நடுவர், மைதானத்திலேயே 5 ரன்கள் பெனால்டி வழங்கினார். அதனால், இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை ஆரம்பிக்கும் போதே ஒரு பந்து கூட வீசப்படாமல் 5/ 0 என்கிற போனஸ் ரன்களுடன் தான் தொடங்கியது.
இதற்கு காரணம் என்னவென்றால் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின்போது இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் களத்தில் இருந்த நடுவர்கள் மூலம் வார்னிங் செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து இதேபோல் நடக்க கூடாது என இந்திய அணியையும் நடுவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில், போட்டியின் இரண்டாம் நாளான இன்று அஸ்வின் பேட்டிங் செய்யும்போது ஆடுகளத்தின் நடுப்பகுதியில் ஓடியதால் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நடுவரிடம் புகார் அளித்தார். அதனை சோதித்த நடுவர் அஸ்வின் செய்த தவறை சுட்டிக்காட்டி அவரது இந்த செயல் ஆடுகளத்தை சேதப்படுத்தும் விதமாக அமைந்ததாக கூறி இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்களை வழங்கினார்.
இந்திய இன்னிங்ஸின் 102வது ஓவரின் மூன்றாவது பந்தைத் தொடர்ந்து ஆடுகளத்தின் நடுவில் ஓடியதற்காக கள நடுவர் ஜோயல் வில்சன் அஸ்வினுக்கு வார்னிங் கொடுத்தார். இது அஸ்வினுக்கு அதிர்ச்சியை கொடுக்கவே, அவர் தான் அனுமதிக்கப்பட்ட 5 மீட்டருக்குள் ஓடி வந்ததாக நடுவரிடம் கூறினார்.
ஆனால் அஸ்வினின் வார்த்தைகளை ஏற்காத நடுவர்கள், இங்கிலாந்து அணி பேட்டிங்கின் போது 5 ரன்களுடன் தான் பேட்டிங்கை தொடங்குவார்கள் என்று திட்டவட்டமாக கூறினர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளமல் 5 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடங்கியது.
விதி கூறுவது என்ன?
அன்ஃபெயர் ப்ளே பிரிவின் கீழ் வரும் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் விதி 41.14.1 இன் படி, "ஆடுகளத்திற்கு வேண்டுமென்றே அல்லது தவிர்க்கக்கூடிய சேதத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது. ஸ்டிரைக்கர் பந்தை விளையாடும் போது அல்லது விளையாடும் போது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்தால், அந்த இடத்தை விட்டு அவர்/அவள் உடனடியாக வெளியேற வேண்டும்.
ஆடுகளத்தில் அவர்/அவள் இருப்பது நியாயமான காரணமின்றி இருப்பதாக நடுவர் கருதினால், பேட்டர் தவிர்க்கக்கூடிய சேதத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுவார்."
ஒரு அணி "முதல் மற்றும் இறுதி எச்சரிக்கை" பெறும் என விதி கூறுகிறது. மேலும், இது இன்னிங்ஸ் முழுவதும் பொருந்தும். இன்னிங்ஸின் போது எந்தவொரு குழு உறுப்பினரும் மீண்டும் தவறு செய்தால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் வழங்கப்படும் என்றும் கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“