Qualifier 1, CSK vs GT: BCCI To Plant 500 Trees For Every Dot Ball Bowled Bowled In IPL 2023 Playoffs Tamil News: இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வரும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபயர் -1 ) நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் - 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10வது முறையாக ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டாட் பால்களுக்கு பதில் மர எமோஜி
இந்நிலையில், நேற்றைய போட்டி ஒளிபரப்பில் உள்ள கிராபிக்ஸ் விசித்திரமான ஒன்றைக் காட்டியது. பொதுவாக டாட் பந்து என்றால் ஒரு வட்டம் வரும். ஆனால், நேற்று வட்டமும், மர எமோஜியும் மாறி மாறி வந்தன. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதுபற்றி ஆங்கில வர்ணனையில் இருந்த பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தினர்.
அவர்கள் இருவரும் கூறும்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய சுற்றுச்சூழல் முயற்சியின் அடையாளமாக, பிளேஆஃப்களின் போது வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்திற்கும் 500 மரங்களை நட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்றனர். அதனால் தான், ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் ரன் எடுக்கப்படாத ஒவ்வொரு பந்திற்கும் (டாட் பந்துக்கும்) 500 மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை இன்னிங்ஸில் மொத்தமாக 34 டாட் பால்கள் வீசப்பட்டன. அதன்படி, சுமார் 17, 000 மரக்கன்றுகளை பிசிசிஐ நடும்.