MS Dhoni: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டன்களுள் முக்கியமானவராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி நடத்திய அனைத்து வடிவ போட்டிகளிலும் கோப்பைகளை வென்று சாதனையை படைத்துள்ளது.
இதேபோல், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. தற்போது கேப்டன் பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்துள்ள 42 வயதான தோனி நடப்பு ஐ.பி.எல் தொடரில் சாதாரண வீரராக களமாடி வருகிறார்.
தோனி போட்ட வழக்கு
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ் தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரரான மிஹிர் திவாகர் மோசடி குற்றச்சாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
தோனி தனது முன்னாள் தொழில் பங்குதாரரான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருக்கு சொந்தமான ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருந்தார். இந்தியாவிலும் உலகெங்கிலும் கிரிக்கெட் அகாடமிகளை நிறுவுவதற்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் அகாடமிகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை மதிக்காமல் இருவரும் சுமார் ரூ.16 கோடியை ஏமாற்றியதாக தோனி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக ராஞ்சியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) 467 (மதிப்புமிக்க பாதுகாப்பு, உயில் போன்றவற்றில் மோசடி) 468 - (குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஏமாற்றல்), 471 (போலி ஆவணத்தை உண்மையானதாகப் பயன்படுத்துதல்) மற்றும் 120B (குற்றவியல் சதி) ஆகியவற்றின் கீழ் ஆர்கா ஸ்போர்ட்ஸ் இயக்குநர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், தோனியின் பெயரில் உலகம் முழுவதும் கிரிக்கெட் அகாடமிகளைத் திறக்க, ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கிரிக்கெட் அகாடமியை திறப்பது உள்ளிட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை திவாகர் கடைபிடிக்கவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் உரிமைக் கட்டணத்தை செலுத்தவும், குறிப்பிட்ட விகிதத்தில் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் பொறுப்பாகும். ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றவில்லை என்று தோனி தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 2021 ஆகஸ்ட் 15ல் தோனி ஆர்கா ஸ்போர்ட்ஸிற்கான அங்கீகாரக் கடிதத்தை வாபஸ் பெற்று, நிறுவனத்திற்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பினார்.
நோட்டீஸ்களை திரும்பப் பெறப்பட்ட போதிலும், தோனியின் பெயரில் கிரிக்கெட் அகாடமிகள் மற்றும் விளையாட்டு வளாகங்களைத் தொடர்ந்து அவருக்கு எந்தத் தொகையையும் அல்லது தகவலையும் பகிர்ந்து கொள்ளாமல் திறந்துள்ளனர் என்று தோனியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கைது
இந்த நிலையில், இந்த மோசடி வழக்கில் தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரரான மிஹிர் திவாகர் மோசடி குற்றச்சாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவதூறு வழக்கு
இதனிடையே, தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரரான மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவி சௌமியா தாஸ் ஆகியோர் அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு கடந்த ஜனவரி 17 ஆம் தேதி அன்று வழக்கு தொடர்ந்தனர். அப்போது பேசிய மிஹிர் திவாகர், 'நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வருவதற்கு முன்பே, தோனியின் வழக்கறிஞர் தயானந்த் ஷம்ரா பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளோம்' என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.