Icc | worldcup: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்காக நாட்டின் 12 நகரங்களில் உள்ள மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி, அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். நடக்கிறது. அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்திய மைதானங்களில் அதிரடி மாற்றங்கள் - ஐ.சி.சி அறிவுறுத்தல்
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், போட்டி நடக்கும் மைதானங்களை தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மைதானங்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற சில முக்கிய நெறிமுறைகளை மைதான பராமரிப்பாளர்களுக்கு ஐ.சி.சி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பிட்ச்களில் அதிகளவு புற்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் அமைக்கப்பட வேண்டும் என்றும், பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்த 'Wetting Agent' என்ற கெமிக்கலை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக டி20 போட்டியின் கூடுதல் வெர்ஷனாக அல்லாமல் ஐ.சி.சி தரமான உலகக்கோப்பையை நடத்த முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், ஐ.சி.சி-யின் புதிய நெறிமுறைககள் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. போட்டிகள் இந்தியாவில் பகலிரவு ஆட்டமாக நடப்பது 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகத்தை கொடுத்துள்ளது. இது ஐ.பி.எல் தொடருக்கு இணைய உள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி கண்ணை மூடிக் கொண்டு பவுலிங்கை தேர்வு செய்யும். இதற்கு முக்கிய காரணம் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் வரும் பனிப்பொழிவே ஆகும்.
இதேபோல் ஐபிஎல் தொடர்களின் போது பவுண்டரி எல்லைகள் 55 முதல் 65 மீட்டர் தூரம் மட்டுமே அதிகமாக அமைக்கப்படும். இதனால், பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் மழை பொழிவார்கள். இதேபோல் பெரிய ஸ்கோர் அடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பிட்ச்கள் தரமாக போல் அமைக்கப்படும். இது பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக உதவியது. ஆனால், தற்போது ஐசிசி-யின் முடிவுகளால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியும், பந்துவீச்சாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதலாக உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“