Indian-cricket-team | suryakumar-yadav | ishan-kishan | shreyas-iyer: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இத்தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி, அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். நடக்கிறது. அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ஸ்ரேயாஸ், இஷான், ஸ்கை - உலகக் கோப்பையில் யாருக்கு வாய்ப்பு?
இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. உலகக் கோப்பைக்கு சோதனை ஓட்டமாக நடக்கும் இந்த தொடரை இந்திய அணி 2- 0 என்கிற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஆய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 27ம் தேதி நடக்கும் கடைசி மற்றும் 3வது போட்டியில் பங்கேற்பார்கள்.
கேப்டன் ரோகித் இல்லாத நிலையில், கே.எல் ராகுல் தலைமையில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளில் விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். மொகாலியில் நடந்த முதல் போட்டியில் சுப்மன் கில் 77 ரன்களும், இந்தூரில் நடந்த 2வது போட்டியில் சதம் விளாசி 104 ரன்களும் எடுத்தார். ருதுராஜ் 71 - 8 என ரன்கள் எடுத்தார். 3வது வீரராக களமாடிய ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், 2வது போட்டியில் அப்படியே கம்பேக் கொடுத்த அவர் சதம் விளாசி 105 ரன்கள் எடுத்தார்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/YuEGt9DWHwM2km0VWjCt.jpg)
கேப்டன் கே.எல். ராகுல் 2 போட்டிகளிலும் அரைசதம் விளாசி 58 - 52 ரன்கள் எடுத்து சிறப்பாக இருந்தார். இதேபோல், சூர்யகுமார் யாதவும் 2 போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தினார். முதல் போட்டியில் 50 ரன்கள் எடுத்த அவர், 2வது போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து மிரட்டினார். 40 ஓவர்களுக்குப் பிறகு களமாடிய அவர் டி20-யில் ஆடுவது போல அதிரடியாக மட்டையைச் சுழற்றினார். 37 பந்துகளில் 6 சிக்ஸர் 6 பவுண்டரிகளை பறக்கவிட்ட அவர் 72 ரன்கள் குவித்து அசத்தினார். ஒருநாள் போட்டிக்கு 'அவர் சரிப்பட்டு வரமாட்டார்' என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவருக்கு பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் - கேப்டன் ரோகித் சர்மா தொடர் ஆதரவு கொடுத்தனர். அதன் பலன் தற்போது கிடைத்து வருகிறது.
சூர்யகுமார் யாதவைப் போல் மிடில் -ஆடரில் களமாடிய விக்கெட் கீப்பர் வீரரான இஷான் கிஷன் முதல் போட்டியில் 18 ரன்களுடனும், 2வது போட்டியில் 31 ரன்களுடனும் ஆட்டமிழந்து இருந்தார். 2வது போட்டியில் அவர் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/G2luCXtiTiMcA4Ftw0dC.jpg)
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அணியில் இடம் பிடித்த கே.எல். ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆசிய கோப்பையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு பேக்-அப் வீரராக சூர்யகுமார் யாதவையும், கே.எல். ராகுலுக்கு பேக்-அப் வீரராக இஷான் கிஷனையும் அணியில் சேர்த்தனர். இப்போது அந்த இரண்டு வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ராகுலுக்கு உலகக் கோப்பை ஆடும் லெவனில் நிச்சயம் இடம் கிடைக்கும் என தெரிகிறது. ஆனால், 4வது வீரராக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், ராஜ்கோட்டில் நடக்கும் அந்தப் போட்டியில் உலகக் கோப்பை ஆடும் லெவனை இந்தியா களமிறங்கும். அப்போது 4வது வீரராக சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் - ஸ்ரேயாஸ் ஐயர் இவர்களில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். லீக் சுற்று தொடங்குவதற்கு முன், இந்தியா இரண்டு உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“