World Test Championship Final Tamil News: உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, 2ம் இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான ஆட்டத்தில் எதிர்கொள்ள உள்ளது. அடுத்த மாதம் 18ம் தேதி முதல் நடவுள்ள இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன.
இந்த நிலையில், "நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, அது எப்போதுமே ஒரு அருமையான சவாலாக இருந்துள்ளது. அதே போல் இந்த போட்டியும் இருக்கும். மற்றும் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதில் மிகவும் உற்சாகமாக உள்ளோம்" என்று ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் உலகின் தலைசிறந்த வீரராக திகழும் கேன் வில்லியம்சன் கூறினார்.
மேலும் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகாக நடந்த போட்டிகள் உண்மையான உற்சாகத்தை அளித்திருப்பதை நாங்கள் கண்டோம். இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் எங்கள் அணியின் பங்களிப்பு போன்றவை மிகவும் இறுக்கமாக இருந்தன. அதேபோல் நீங்கள் முடிவுகளைப் பெற கடுமையாக போராட வேண்டியிருந்தது, இது மிகவும் சிறந்தது" என்று வில்லியம்சன் கூறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர், 'இங்கிலாந்தின் சூழலுக்கு ஏற்ப வேகப்பந்துகளை வீசக்கூடிய பந்து வீச்சாளர்களை இந்தியா கொண்டுள்ளது. ஆனால் அங்குள்ள ஆடுகளம் எப்போது வேண்டுமானாலும் மாறும் தன்மை கொண்டவை' என்று கூறினார்.
"இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், அவர்கள் வெவ்வேறு நிலைமைகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் மேகமூட்டமான சூழ்நிலையில் பந்தை நன்றாகவே 'ஸ்விங்' செய்வார்கள். ஆனால் சூரியன் தலையை காட்டினால், ஆடுகளத்தில் அவர்களின் பந்து வீச்சு எடுபடாது.
மேலும் இங்கிலாந்தில் எப்போது வேண்டுமானாலும் சூழல் மாறக்கூடும், எனவே நான் அதிகமாக ஏதும் திட்டமிட போவதில்லை. கட்டுப்படுத்தக்கூடியவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன்" என்று வாக்னர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)