இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இலங்கை 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலககோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இங்கிலாந்தின் கார்டிப்பில் நேற்று ( ஜூன் 4ம் தேதி) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.
சிறப்பான துவக்கம் : இலங்கை அணியில் துவக்க வீரர்களாக கேப்டன் கருணரத்னே - குசல் பெரேரா சிறப்பான துவக்கம் தந்தனர். இலங்கை அணி 33 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. 3 மணிநேரத்திற்கு ஆட்டம் தடைபட்டது. பின் துவங்கிய போட்டி இரு அணிகளுக்கும் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணி 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது.
குசல் பெரேரா அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். ஆப்கன் தரப்பில், முகம்மது நபி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 187 ரன்கள் இலக்கு : இலங்கை வீரர் மலிங்கா வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை தரப்பில் 4 விக்கெட்கள் வீழ்த்திய நுவன் பிரதீப், ஆட்டநாயகன் விருதை வென்றார்.