17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Syed Mushtaq Ali Trophy: Tilak Varma slams third consecutive T20 hundred
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.
தொடக்க நாளான இன்று குரூப் ஏ -பிரிவில் இடம் பெற்றுள்ள ஐதராபாத் - மேகாலயா அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செயத ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 249 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது மேகாலயா.
3-வது சதம் - மிரட்டி எடுக்கும் திலக் வர்மா
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் கேப்டன் திலக் வர்மா தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடித்து மிரட்டிய அவர் 67 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 151 ரன்களை குவித்து அசத்தினார்.
திலக் வர்மா சதம் அடித்து மிரட்டியதன் மூலம், தொடர்ந்து மூன்று டி20 சதங்களைப் பதிவு செய்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், 150 ரன்கள் எடுத்ததன் மூலம், ஷ்ரேயாஸ் ஐயரின் (147) முந்தைய சிறந்த சாதனையை முறியடித்து, டி20களில் 150-க்கும் அதிகமான ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, 3-1 என கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டி இருந்தார் திலக். 10 நாட்களில், தற்போது டி-20யில்சதம் விளாசி அசத்தி இருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, 22 வயதான திலக் வர்மா 90 இன்னிங்ஸ்களில் 2950 டி20 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும், நான்கு சதங்களை அவர் விளாசியுள்ளார்.
அக்டோபர் 31 ஆம் தேதி ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்த ஐந்து வீரர்களில் திலக் வர்மாவும் ஒருவர்என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“