இந்தியாவின் முன்னணி விளையாட்டாக கிரிக்கெட்தான் இருக்கிறது. கிரிக்கெட் மட்டையைப் பிடிக்கும் ஒவ்வொருவரும் சச்சினாக, தோனியாக... இப்போது கோஹ்லியாக ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
இவர்களும் ஆரம்ப காலத்தில் ’யார் இந்த பையன், நல்லா விளையாடுறானே’ என்று பேசப்பட்டவர்கள்தான். அப்படித்தான் தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் சிலரைப் பற்றி ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். அப்படி இந்த ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்த்த இளம் நட்சத்திரங்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.
ரிஷப் பந்த்
19 வயது ஆன இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறார். இடது கை ஆட்டக்காரர். விக்கட் கீப்பிங் செய்வதோடு அதிரடியாக பேட்டிங் செய்யவும் செய்கிறார். தோனியுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறார். 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டியின் மூலம் கவனம் பெற்றவர். தந்தையை இழந்த போதிலும் தொடரில் சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார். ரன்களைக் குவிப்பதிலும் சளைத்தவர் இல்லை. இவருடைய விக்கட் கீப்பிங் திறமைக்கு விரைவிலேயே வாய்ப்பு கிடைக்கலாம்.
நிதிஷ் ராணா
இவருக்கு வயது 23, மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறார். டெல்லியைச் சேர்ந்தவர். இவரும் இடது கை ஆட்டக்காரர்தான். அவ்வப்போது பவுலிங்கும் செய்கிறார். ஆஃப்-பிரேக் பவுலிங் இவருக்கு நன்றாக வருகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவதாக களமிறங்கும் இவர் அனைத்து போட்டியிலும் சிறப்பாக ரன்களைக் குவித்து வருகிறார். இவருடைய ஷாட்கள் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறது.
ராகுல் திரிபாதி
புனே ரைசிங் ஸ்டார்ஸ் அணியைச் சேர்ந்த இவருக்கு வயது 26. மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர். இவரை வெறும் ரூ.10 லட்சத்துக்குதான் இந்த ஐபிஎல் தொடரில் ஏலம் எடுத்தனர். ஆனால் தன்னுடைய மதிப்பானது அதுக்கும் மேல என்று, தன் திறமையை அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். புனே அணிக்கு தொடக்க வீரரே இவர்தான். புனே அணியில் முன்னணி நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் தனித்து தெரிகிறார். இவருக்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்கின்றன.
குருணல் பாண்டியா
இவர் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்தவர். 26 வயதான இவர் இடது கை ஆட்டக்காரர். ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான இவர் எப்போது இறங்கினாலும் பந்தை விளாசி எடுக்கிறார். பவுலிங்கிலும் சுழற்பந்தின் மூலம் பேட்ஸ்மேன்களைத் திணறிடிக்கிறார். ரன் எடுப்பதிலும், விக்கெட் வீழ்த்துவதிலும் சிறப்பாக செயல்படும் இவருக்கு இந்திய அணியில் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
பாசில் தம்பி
குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடிவரும் பாசில் தம்பிக்கு வயது 23. கேரளாவைச் சேர்ந்த பாசில் தம்பி, தனது வேகப்பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணி வீரர்களை திணறடிக்கிறார். இவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய அணியில் சேர்ந்து பந்து வீசும் வாய்ப்பு விரைவில் இவருக்கு கிடைக்கலாம்.
சஞ்சு சாம்சன்
டெல்லி டேர்டெவிள்ஸ் அணியைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் அதிரடியையும், விக்கெட் கீப்பிங்கிலுரும் அருமையாகவும் செயல்பட்டு வருகிறார். இந்தத் ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சஞ்சு சாம்சன் . இந்த இளைஞர்கள் அனைவரும் இதே போல தொடர்ந்து சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவர்கள் அடைய வேண்டிய உச்சத்தை அடைவார்கள் என்று நிச்சயமாக சொல்லலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.