இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் யுஸ்வேந்திர சாஹல். தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஏற்கனவே அவர் மனைவி தனஸ்ரீ வர்மாவுடனான விவாகரத்து பஞ்சாயத்தில் சிக்கி இருக்கும் சூழலில், தற்போது மும்பை ஓட்டலில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுஸ்வேந்திர சாஹல் மும்பையைச் சேர்ந்த பல் மருத்துவரும், நடன இயக்குனருமான தனஸ்ரீ வர்மாவை டிசம்பர் 2020 இல் அரியானாவின் குருகிராமில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அந்த ஆண்டின் தொடக்கத்தில் தனஸ்ரீயின் யூடியூப் நடன வகுப்புகளுக்கு சாஹல் சென்று வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு இன்னும் குழந்தை இல்லாத நிலையில், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை துண்டித்துக் கொண்டனர். மேலும், சாஹல் தனது கணக்கில் இருந்து தனஸ்ரீ இடம்பெறும் அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார். அதே சமயம் தனஸ்ரீயின் சில படங்கள் அவரது கணக்கில் உள்ளன.
2022 ஆம் ஆண்டில், தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து 'சாஹல்' என்ற குடும்பப்பெயரை அகற்றினார். இது அவர்களின் உறவில் இருக்கும் சிக்கல்கள் பற்றிய ஊகங்களைத் தூண்டியது. அதே நேரத்தில், சாஹல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'புதிய வாழ்க்கை தொடங்குகிறது' என்று குறிப்பிட்டு இருந்தார். இதுவே அவர்கள் இருவரும் பிரிய இருப்பதற்கு சாட்சி என்று கூறி சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பரபரப்பாக பேசினர். அது தற்போது வரை தொடர்ந்தும் வருகிறது.
சாஹலின் விவகாரத்து பஞ்சாயத்திற்கு மத்தியில், அவர் சமீபத்தில் மும்பையில் உள்ள ஓட்டலில் அடையாளம் தெரியாத மர்மப் பெண்ணுடன் காணப்பட்டுள்ளார். இது அவர் மீதான அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், மும்பை ஹோட்டலில் சாஹல் அடையாளம் தெரியாத பெண்ணுடன் இருந்ததும், இருவரும் சாதாரணமாக உடையணிந்து, கேமராக்களை முகத்தை மூடியபடி தவிர்க்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.