செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஏரியாக உள்ளது. அண்மையில் மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து. ஏரியின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 12) காலை 9 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் முன்தாக அறிவித்தது. 100 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 24 அடியுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தற்போது 22.25 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 2,046 கன அடியாக உள்ளது.
இந்நிலையில், நண்பகல் 12 மணி முதல் வினாடிக்கு 2000 கனஅடியாக உயர்த்தி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பிற முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரிக்கு நீர்வரத்து 623 கனஅடியில் இருந்து 704 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 657 கனஅடியில் இருந்து 900 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து 32 கனஅடியில் இருந்து 63 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வரும் கிருஷ்ணா நதிநீரின் வரத்து 496 கனஅடியில் இருந்து 394 கனஅடியாக சரிந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/