கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. இறுதியாக ஏப்ரல் 20ம் தேதி தேர்வு நிறைவடைந்தது. இந்த ஆண்டின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, சுமார் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதியுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகள் இத்தேர்வு நடத்தப்பட்டது.
இதில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனித் தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். இந்தத் தேர்வை மாணவ மாணவிகள் மட்டுமல்லாது, தனித்தேர்வர்களாக 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டின் இத்தேர்வின் முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன. சமீபத்தில் இதுகுறித்து பேட்டியளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும். வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் முழூவீச்சில் நடந்து முடிந்துள்ளது. மதிப்பெண்களை மீண்டும் சரிபார்த்து இணையதளத்தில் ஏற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவகிறது.” என்று கூறியிருந்தார்.
இந்தத் தேர்வின் முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.