கயத்தாறு பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் மர்மமாக இறந்து கிடந்தான். இந்த சம்பவத்தில் பள்ளியில் ஏற்பட்ட சண்டை வீடியோ வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடையார் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16ம் தேதி பள்ளிக்கூடம் அருகே இருந்த கிணற்றில் உடையார் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து கயத்தாறு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மதிய உணவு இடைவேளையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது உடையார் மற்றொரு மாணவனைத் தாக்கினான். இதில் அந்த மாணவன் மயங்கி விழுந்துள்ளான். அவனுக்கு கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே உடையாரை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். மத்திய உணவு வேளையில், மாணவர்கள் சண்டையிடும் காட்சி வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவன் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, கயத்தாறு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாக்கப்பட்ட மாணவன் இறந்து விட்டால், தன்னை காவல்துறை கைது செய்து விடுவார்கள் என்று அச்சம் அடைந்த உடையார், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளது.
இதை மறுத்த உடையார் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.