தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (16.3.18) முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகியது. வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைப்பெறுகின்றன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 10,01,140 மாணவர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர்.சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து மொத்தம் 50,756 மாணவ, மாணவிகளும், புதுச் சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 17,514 பேரும் தேர்வெழுதவுள்ளனர்.
இதற்காக தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வில், முறைகேடுகளை தடுக்க, தமிழகம் முழுவதும், 6,900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுபோல், காரைக்காலில், 17,514 மாணவ மாணவிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். இதற்காக காரைக்காலில் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகள் தேர்வறைக்கு கால்குலேட்டர், செல்போன் போன்ற உபகரணங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும், மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்ஃபோன் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க அரசுத்தேர்வு இயக்ககத்தில் முழு நேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மட்டுமெ 186 கைதிகள் 10-ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதுகின்றனர்.