/tamil-ie/media/media_files/uploads/2017/12/mabulance-.jpg)
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு சென்னை செல்வதற்காக ஆம்புலன்ஸ் வழங்க தாமதமானதால், 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி சரிகா என்பவர், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் கடந்த ஓராண்டாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் நிலை மோசமாகவே கடந்த ஒரு வாரமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே, மருத்துவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால், சென்னைக்கு மாணவியை அழைத்துசெல்ல, மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்கவில்லை என மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
சுமார் 7 மணிநேரமாக ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை எனவும், அதுவரை மாணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கவில்லை எனவும், ஆக்ஸிஜன் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மாணவி சரிகா உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.