ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சி அமைப்பதற்காக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
அவர்கள் எல்லோரும் அப்போதைய கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது சபாநாயகர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணியும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக சட்டசபை சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல் இந்த வழக்கில் 11 எம்.எல்.ஏக்கள், சட்டசபை செயலாளர் ஆகியோரும் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.