11 MLAs disqualification case : முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 11 பேரை தகுதி நீக்க வழக்கை சபாநாயகர் தனபால் காணொலி காட்சி மூலம் விசாரித்து வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுக இரண்டாக பிளந்தது. அப்போது, முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தனி அணியாக செயல்பட்ட, தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 11 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
எனவே, அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
ஆனால், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி திமுக சார்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு, ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரியிருந்த சபாநாயகர் தனபால், இன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரிடமும் விசாரணை நடத்த உள்ளார். காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தவுள்ள சபாநாயகர் தனபால், 11 எம்.எல்.ஏ.க்களின் விளக்கங்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக இன்று காலை எம்.எல்.ஏக்கள் பாண்டியராஜன் மற்றும் நட்ராஜ் இடம் விசாரணையை சபாநாயகர் தனபால் முடித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil